கோவை: தந்தை இறந்த சோகத்தில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் பாலகிருஷ்ணன் (20).
இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாலகிருஷ்ணனின் தந்தை ரவிக்குமார் உயிரிழந்தார்.
இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். மேலும் கல்லூரிக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். பின்னர் வடகோவை பகுதியில் உள்ள மாலில் ஒரு கடையில் பணிக்கு சேர்ந்தார்.
அதற்காக தனது நண்பர் திவ்யநாதன் என்பவருடன் சித்தாபுதூர் பாரதியார் ரோடு பகுதியில் அறையில் தங்கிருந்தார். நேற்று திவ்யநாதன் வழக்கம் போல பணிக்கு சென்று மதியம் அறைக்கு திரும்பினார். அப்போது அறையின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.
வெகு நேரமாக கதவை தட்டியும் பாலகிருஷ்ணன் கதவை திறக்காததால் திவ்யநாதன் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பாலகிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

