கோவை: கோவை கொடிசியாவில் நாளை ஜவுளி தொழில் மாநாடு துவங்குகிறது.
தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் வலுவான கட்டமைப்பினைச் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தவும் ஜவுளித் துறையில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் முதலாவது ஜவுளி தொழில் மாநாடு 360 கோவை கொடிசியா வளகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (29.01.2026- 30.01.2026) இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சிகள்
இம்மாநாட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார். இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் ஜவுளித் தொழிலுக்கென பிரத்யேகமாக கண்காட்சி (Exhibition), அழகு நயப்பு காட்சி (Fashion Show), வாங்குவோர் – விற்போர் சந்திப்பு (Buyer-Seller Meet), ஐந்து கருத்தரங்குகள் (Panel Discussion) மற்றும் தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதியில் அமைய உள்ள PM-MITRA ஜவுளிப் பூங்கா தொடர்பான விழிப்புணர்வுக்கான Roadshow நடைபெறவுள்ளன.
இம்மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் 2025-26, துணிநூல் துறை மற்றும் கைத்தறி துறை ஆகியவற்றால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மானியங்கள் ஆகியற்றை வழங்கப்பட உள்ளன.

