கோவை: மழையின் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த பூ மரம் வேரோடு சாய்ந்தது…
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழும் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக வலுவில்லாமல் இருக்கின்ற மரங்களை வெட்டி அகற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் ஜெனரேட்டர் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்த பெரிய பூ மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மழையின் காரணமாக நன்கு ஊறி இருந்த அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.