கோவை: ஆட்சியர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கணபதி பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரிடம் 1989ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்காக 18 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தியது.
அதற்குரிய இழப்பீட்டுத் தொகையில் ஒரு பங்கு மட்டுமே, ராமசாமிக்கு வழங்கப்பட்ட நிலையில் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் பணத்தை வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர்.
இது தொடர்பாக ராமசாமியின் வாரிசுகளான சுந்தர் ராஜ், ஜானகி அம்மாள், மாணிக்கம் ஆகியோர் கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த 17ம் தேதி, இழப்பீட்டுத் தொகைக்கு ஈடாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பொருட்களை ஜப்தி செய்ய ஆட்சியர் அலுவலகம் வந்தனர். தொடர்ந்து, அங்கிருந்த துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காலை முதல் மாலை வரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, அரசுத் தரப்பில் வருகின்ற ஆகஸ்ட் 26ம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகையைத் தருவதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.