கோவை: கோவையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்
கோவை மாநகரில் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
Advertisement

மாநகரில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை அதிரடியாகக் கைது செய்து வருகிறோம். இதனால், கோவை மாநகரில் போதைப்பொருட்கள் புழக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்து காவல்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
கோவை மாநகரில் இருந்த 110 ரவுடிகள் மாநகரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்டவர்களில் மாநகருக்குள் மீண்டும் நுழைந்த 10 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகரில் ‘பீட்’ போலீஸ் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 178ஆக இருந்த குற்றச் சம்பவங்கள், தற்போது 128ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு காவல் ஆணையர் கூறினார்.