கோவை: கோவையில் மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை போலீசார் கைது செய்தனர்.
செட்டிபாளையம் பகுதியில் வசித்துவரும் ஒருவருக்கு, 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறார். அவரது இளைய மகள் மூளை வளர்ச்சி குன்றியவர். 18 வயதாகியும் 3 வயது குழந்தைபோல் நடந்து கொள்வார்.
கணவன், மனைவி இருவரும் நேற்று காலை வேலைக்கு போகும்போது, இளைய மகளை மூத்த மகளின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, வேலைமுடிந்து வந்ததும், திரும்ப அழைத்து வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று காலை, இளம்பெண்ணின் தாயார் வேலைக்கு செல்லும்போது, அவரை அக்கா வீட்டிற்கு நடந்து செல்லுமாறு கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் இளம்பெண்ணின் அக்காவும். அவரது கணவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இளம்பெண்ணை காணவில்லை.
உடனே அவர், தனது தங்கையை காணவில்லை என்கிற பதட்டத்தில் அக்கம் பக்கத்தில் சென்று தேடியுள்ளார்.
அப்போது அங்கு கட்டிடத்தில் தங்கி வேலைசெய்யும் விஜய் என்பவர், மனவளர்ச்சி குன்றிய அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு கட்டிடத்தின் மேலே சென்றதைப் பார்த்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
உடனே அவர் மேலே சென்று பார்த்தபோது, மூளை வளர்ச்சி குன்றிய அவரது தங்கை, ஆடைகள் கலைந்த நிலையில் நடுங்கியபடி நின்றிருந்தார்.
இவர்கள் வருவதை பார்த்ததும், விஜய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். விசாரணையில், கட்டிட தொழிலாளியான விஜய், மூளை வளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை அடைத்து வைத்து, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்டிட தொழிலாளியான விஜயை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



