கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே கலப்பு திருமணம் செய்து கொண்ட மகளை கடத்த முயன்ற ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா(22) என்பவரும், அல்லி நகரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டர் புதூரில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை சரண்யாவின் தந்தை ஆனந்தன், தாயார் லதா, அவரது அண்ணன் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள், பிரகாஷின் நண்பர் உள்ளிட்ட 7 பேர் கலப்பு திருமணம் செய்த ஜோடி தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்பு தங்களது மகளை சமாதானம் கூறி அழைத்துள்ளனர்.
அதற்கு அந்தப் பெண் சம்மதிக்க மறுக்கவே ஒரு கட்டத்தில் அவரை பலவந்தமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண் உடனடியாக வீட்டிற்குள் சென்று தாளிட்டுள்ளார் அப்போது 7 பேரும் சேர்ந்து வீட்டின் ஜன்னல், கதவுகளை அடித்து உடைக்க முயன்றுள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற சூலூர் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கிருந்து தேனி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.