கோவை: குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கோவையில் த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றுள்ளது. பல்வேறு கட்சியினரும் டாஸ்மாக் கடைகள் கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள், மது ஒழிப்பு மாநாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே கோவையில், க.க.சாவடி-வேலந்தாவளம் சாலை அருகே, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதனால் அருகிலுள்ள குடியிருப்பில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த மதுபான கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழக வெற்றி கழகத்தின் தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
க.க.சாவடி-யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் அதிகமானோர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
டாஸ்மாக் கடை மூடாவிட்டால், நீக்கப்படவில்லை என்றால், ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று த.வெ.க.வினர் தெரிவித்தனர்.