கோவை: கோவையில் விபத்தில் சிக்கிய மயிலை ஆம்புலன்ஸில் அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.
கோவை, சிங்காநல்லூர் அருகே மின்கம்பத்தில் மயில் ஒன்று அடிபட்டு காயமடைந்துள்ளது. அதனை பார்த்த அப்பகுதி மக்கள், MEDI SQUAD ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரபத், படுகாயமடைந்த மயிலை திறமையாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோவை வனத்துறை அலுவலகத்திற்கு விரைந்தார்.
மயில் மீட்கப்பட்டு, சரியாக ஏழு நிமிடங்களில் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரிகளின் பரிசோதித்ததில் காயமடைந்த ஆண் மயிலுக்கு நெஞ்சுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் பிரபத்தின் இந்த துரிதமான செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.