கோவை: கோவையில் ஆம்னி பேருந்தின் லக்கேஜ் கதவை திறந்தபடி இயக்கியதால் ஸ்கூட்டரில் சென்ற நபர் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை டவுன்ஹால் ஹாஜி முகமது வீதியை சேர்ந்தவர் உமர் நவ்பிக் (30). யுபிஎஸ் பேட்டரி கடை நடத்தி வந்தார்.
இவர் நேற்று இரவு உக்கடத்தில் இருந்து செல்வபுரம்-பேரூர் பைபாஸ் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். இவரது பின்னால் ஆம்னி பேருந்து வந்து கொண்டிருந்தது.
பேருந்தின் பக்கவாட்டில் ‘லக்கேஜ்’ கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை டிரைவர் கவனிக்கவில்லை. இதனால் முன்னால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மீது கதவு இடித்தது.
இதில் உமர் நவ்பிக் கீழே விழுந்தார். அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஆம்னி பேருந்து டிரைவர் மகாலிங்கம் (34) மற்றும் கிளீனரான சிவகங்கை காரைக்குடியை சேர்ந்த சுதாகர் (19) ஆகிய இருவரை கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



