கோவை: மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமியார் போல வேடமணிந்து அமர்ந்திருந்த குற்றவாளியை போலீசார் ‘லபக்’ என்று பிடித்தனர்.
கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றங்களில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பிடிவாரண்ட பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள நபர்களை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் படாதபாடுபட்டு வருகின்றனர்.
Advertisement

இதனிடையே குற்றவாளி ஒருவர் மருதமலை அருகே மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அடிவாரம் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, சாமியார் போல வேடமணிந்து, சாமியர்களுடன் சாமியாராக அமர்ந்திருந்தவர், போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளி என்பது இருந்தது தெரியவந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அன்னூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவர் போதைப் பொருள் தடுப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
சாமியார் உடையில் கழுத்தில் மாலை அணிந்திருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் மருதமலை சுற்றுவட்டாரத்தில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.