கோவை: தமிழகத்திலேயே முதன்முறையாக சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்காவை கோவையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தனர்.
கோவை காளப்பட்டி அருகே நேத்ரா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்கா இன்று திறக்கப்பட்டது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புக் குழந்தைகளுக்கான பூங்காவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் குழந்தைகளுடன் விளையாடி உற்சாகப்படுத்தினர்.
“நம்ம சிறப்புப் பூங்கா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூங்கா மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
எங்கும் மேடு பள்ளங்கள், படிக்கட்டுகள் இல்லாத இப்பூங்கா முழுவதையும் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பார்வையிடலாம்.
இங்கு விளையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள சாதனங்களும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக விளையாடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சிறப்புக் குழந்தைகள் அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளும் விதமாக பல்வேறு செயல்பாடுகளும் கற்றுத்தரப்படுகிறது.
திங்கட்கிழமையைத் தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இப்பூங்கா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்களது மாற்றுத்திறனாளி குழந்தைகளை இங்கு பராமரிப்பிற்கு விட்டுச் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.