கோவை: ராமநாதபுரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் பத்மா லே-அவுட் பிரிவில் உள்ள மெயின் ரோட்டில் கடந்த வெள்ளிக்கிழமை குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் பெருக்கெடுத்த திடீர் வெள்ளத்தால் சாலையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
வாகனங்கள் செல்லும்போது சாலையோரம் நடந்து செல்பவர்கள் மற்றும் மாணவர்கள் மீது
தண்ணீருடன் கலந்து சகதியும் பீய்ச்சி அடிப்பதால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடைப்பைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 5 நாட்களாக இந்த அவல நிலை நீடித்து வருகிறது. அதிகாரிகள் யாரும் இதனைக் கண்டு கொள்வதில்லை எனவும் அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகராட்சி இதில் கவனம் செலுத்தி இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments are closed.