கோவை: சிறைக்குள் அனுமதிக்க மறுத்ததால் போலீசாரை வாளை காட்டி மிரட்டிய முன்னாள் கைதியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மத்திய சிறை முன்பு நேற்று போலீசார் வழக்கம் போல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை 5 மணியளவில் அங்கு ஒரு நபர் வந்துள்ளார்.
அவர் சிறை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரிடம், தான் முன்னாள் கைதி என்றும், உள்ளே தனது சகோதரரை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதற்கு போலீசார், காலை 8 மணி முதல் மட்டுமே கைதிகளை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து, “என்னை உள்ளே அனுமதியுங்கள், என் சகோதரர் மதுரையை சேர்ந்த பாலாவை சிலர் துன்புறுத்தி வருகிறார்கள்!” என்று மிரட்டியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் மற்றும் சிஆர்பிஎப் போலீஸ்காரர் அந்த நபரை சமாதானப்படுத்தி, “அனைவரும் உள்ளே பாதுகாப்பாக இருக்கிறார்கள், காலை வரலாம்” என்று கூறினர்.
கைது
பின்னர் அந்த நபர் “நான் 10 மணிக்கு திரும்பி வருகிறேன்” என்று கூறி சென்றார். இதுகுறித்து போலீசார் ஜெயிலரிடம் தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனே ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறை அருகே சுற்றி கொண்டிருந்த அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர் மதுரை மேலூர் மேற்கு வீதியை சேர்ந்த அய்யனார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அய்யனாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கடைசியாக அய்யனாரின் ஆசைப்படியே அவர் ஜெயிலுக்குள் அனுப்பப்பட்டார்.





