கோவை: கோவை மாநகராட்சியில் இரண்டாவது நாளாக குப்பை வண்டி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனங்கள் சில மாற்றமடைந்துள்ளது. இந்த நிலையில், புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கான சம்பளம் எவ்வளவு? சலுகைகள் என்னென்ன? வேலை நேரம் எவ்வளவு? என்பதெல்லாம் தெரிவிக்காமல் தங்களை வேலை செய்ய நிர்ப்பந்திப்பதாகக் கூறி குப்பை வண்டி ஓட்டும் ஒப்பந்த ஓட்டுநர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இன்று இரண்டாவது நாளாக அந்தந்த மண்டலங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிதாக வந்துள்ள நிறுவனம், கோவை மாநகரில் உள்ள வேலையாட்களுக்கு வேலை வழங்காமல் வெளியூர்களிலிருந்து ஆட்களை வரவழைத்து அவர்களுக்கு வேலை தருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்வேறு மண்டலங்களில் உள்ள குப்பை வண்டிகள் பழுதடைந்து இருக்கின்ற நிலையில் அவற்றை சரி செய்யாமல் புதிதாக வாகனங்களை வாங்கி இயக்குவதாகவும், சில வாகனங்களில் பழுதை நீக்காமலேயே எஃப்.சி காட்டி விடுவதாகவும் குற்றம் சாட்டினர்.
எனவே புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்த நிறுவனம் தங்களை நேரில் சந்தித்து தேவைகள் என்னென்ன என்பதைக் கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழல் காரணமாக மாநகரில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.