கோவை: 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கண் நீர் அழுத்த நோய் பாதிப்பு ஏற்படலாம் என்றும், அதற்கு உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை அவசியம் என்றும் கோவை தி ஐபவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக அளவில் கண் நீர் அழுத்த நோய் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 8 முதல் 14 வரை குளுக்கோமா வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
தி ஐ பவுண்டேஷன்
இதனிடையே, கோவையில் செயல்பட்டு வரும் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில், கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதாகவும், அறுவை சிகிச்சைக்கான கட்டணத்தில் தள்ளுபடி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குளுக்கோமா நோய் குறித்து அம்மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி, மருத்துவர்கள் முரளிதர், ஐமன், நிரஞ்சனா ஆகியோர் கூறியதாவது:-
குளுக்கோமா பாதிப்பைக் கண்டறிய வழக்கமான கண் மற்றும் நரம்பு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் ஒட்டுமொத்தமாக 5% பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோரில் மட்டும் 8% பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பார்வை இழப்பு
இந்த நோய் பாதிக்கப்பட்டவர் பார்வையிழக்கும் அபாயம் உள்ளது. முதலில் பக்கவாட்டுப் பகுதிகளில் பார்வை மங்கலாகிக்கொண்டே வரும். பிறகு மெல்லமெல்ல முழு பார்வையும் பறிபோகும்.
எனவே நோய் பாதிப்பு ஏற்பட்ட உடனே சிகிச்சையைத் தொடங்க வேண்டும். குளுக்கோமா நோயால் போன பார்வையை மீட்க முடியாது. ஆனால், அந்த நோய் பரவலைத் தடுக்க முடியும்.
பார்வை மங்குதல், கண்களில் நீர் வடிதல், கண் கூச்சம் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாகும். 15 ஆயிரம் பேரில் 1 குழந்தைக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இந்த சிகிச்சைக்கான கட்டணமும் குறைவு தான். ஆனால், தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை தேவை.
இது மற்றவருக்கு பரவும் தன்மை உள்ள நோய் கிடையாது என்றாலும், மரபணு ரீதியாக மற்றவருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்
இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

