கோவை: கோவை பெண் டாக்டரிடம் தங்கம், வைர நெக்லஸ் திருடிய காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை துடியலூர் கவுண்டர் மில் பகுதியைச் சேர்ந்தவர் எழில் இளநங்கை (47). பல் டாக்டர். இவரது பெற்றோர் கோவை ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் வசித்து வருகின்றார்.
எழில் இளநங்கை தனது பிள்ளைகளை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இதேபோல், அவர் சம்பவத்தன்று ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்க வந்தார்.
Advertisement

பின்னர் லாக்கரில் தன்னுடைய நகை மற்றும் வைர நெக்லஸை கழட்டி வைத்தார். பின்னர் சில நாட்கள் கழித்து லாக்கரை பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே இருந்த நகை மற்றும் வைர நெக்லஸ் மாயமாகி இருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து எழில் இளநங்கை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், வீட்டு காவலாளி மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், திருட்டில் ஈடுபட்டது ஆ.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த காவலாளி சதீஷ்குமார்(36) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.