கோவை: வாளையார் சோதனைச் சாவடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 6 கிலோ 140 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடியில் இன்று காவல் துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலக்காட்டிலிருந்து கோவை நோக்கி வந்த பேருந்தினை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, நிபின் (29) என்பவர் பேகில், வைத்திருந்த 6 கிலோ 140 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கண்டுள்ளனர். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கொண்டு நடத்தபட்ட விசாரணையில், நிபின் என்பவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருவதாகவும், கடை உரிமையாளர் ரஹ்மான் (42) என்பவர், தங்கக் கட்டிகளை கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

