கோவை: சூலூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு வந்த 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை சூலூர் சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பேருந்தில் பயணம் செய்த மது சுதன் ராணா என்பவரின் உடைமைகளை சோதனையிட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.
அவரது உடமைகளைச் சோதித்ததில், அவரிடம் 255 கிராம் தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிடிபட்ட நபரிடம் நகைகளுக்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அதிகாரிகள் அந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக சூலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும்,உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து நகைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

