கோவை: மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோவை அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மனு அளித்தனர்…
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் Krystal என்ற நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு அறிவித்த சம்பளம் வழங்கப்படவில்லை, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த மருத்துவ பலன் தொகைகளை செலுத்தவில்லை, சம்பளத்திற்கான ரசீதுகளும் வழங்கப்படவில்லை இதனைக் கேட்டால் பணியில் இருந்து நீக்க அந்த நிறுவனம் முயற்சி செய்கிறது என்று கூறி அந்நிறுவனத்தில் பணிபுரியும் சில பெண் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
ஆட்சியரிடம் மனு அளித்த அவர்கள் திடீரென காலில் விழுந்து கண்ணீர் மல்க அவர்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை கேட்ட மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய தூய்மை பணியாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் இந்நிலையில் தங்களுக்கு உரிய சம்பளம் அந்த நிறுவனம் வழங்காமல் இருப்பதாகவும் இதனை கேட்டால் பணியில் இருந்து நீக்குகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். ஒப்பந்தம் புதுப்பிக்க வேண்டும் என்று கூறி இவ்வாறு செய்வதாக அவர்கள் தெரிவித்தாலும் தங்களை பணியில் இருந்து நீக்குவதற்கு தான் முயற்சிப்பதாக தெரிவித்தனர் மேலும் இது சம்பந்தமாக அரசு மருத்துவமனை முதல்வர் இருப்பிட மருத்துவரிடம் முறையிட்டால் தங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.