கோவை: விபத்தில் நண்பர் சிக்கியதாக பணம் வாங்க வைத்து, வாலிபரிடம் ரூ.43,500 பறித்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் 4 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
விருதுநகரை சேர்ந்தவர் முனிஸ்குமார் (26). இவர், கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கிருந்து ஐடி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அந்த பணியில் இருந்து முனிஸ்குமார் விலகி வேறு வேலை தேடி வருகிறார். கடந்த மாதம் 9ம் தேதி முனிஸ்குமார் சவுரிப்பாளையம் மற்றும் உடையம்பாளையம் பகுதியில் வேலை தேடிச் சென்றார்.
அப்போது உடையம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த தனக்கு தெரிந்த நபர் லோகேஷ் என்பவரது அறைக்கு சென்றார். அங்கு லோகேசின் நண்பர்கள் 3 பேர் இருந்தனர். அவர்களுடன் முனிஸ்குமார் பேசி கொண்டு இருந்தார். அவர்கள், முனிஸ்குமாரிடம் பணம் எவ்வளவு உள்ளது என கேட்டுள்ளனர். அதற்கு முனிஸ்குமார் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, வேலை இல்லாமல் உள்ளேன் என்றுள்ளார்.
உடனே லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முனிஸ்குமாரின் போனை பறித்து, அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை பார்த்தனர். அதில் ரூ.4,500 மட்டும் இருந்தது. இதனால் அவர்கள் 4 பேரும் சேர்ந்து முனிஸ்குமாரிடம், அவரது நண்பர்களுக்கு போன் செய்து விபத்தில் நண்பர் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாக கூறி பணம் வாங்கும்படி மிரட்டி உள்ளனர்.
பணம் பறிப்பு
இதனால் பயந்து போன முனிஸ்குமார் தனது நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து மருத்துவ உதவிக்கு பணம் வேண்டும் என கேட்டு ஜிபே மூலம் ரூ.43,500ஐ பெற்றார். அந்த பணத்தை லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் போனில் இருந்து தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றினர்.
பின்னர், முனிஸ்குமாரிடம் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விரட்டி விட்டனர். முனிஸ்குமாரும் பயந்து 4 பேர் சேர்ந்து பணம் பறித்ததை வெளியே கூறாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முனிஸ்குமார் தனது நண்பர் ஒருவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், முனிஸ்குமாரிடம் உடனே போலீசில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.
இதையடுத்து முனிஸ்குமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் முனிஸ்குமாரிடம், பணம் பறித்தது உடையம்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான சென்னையைச் சேர்ந்த லோகேஷ் (19), மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த செல்டன் (19), தென்காசியைச் சேர்ந்த சிப்ரயலு (19), மயிலாடு துறையைச் சேர்ந்த அப்துல் காத் (19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

