கோவை: சமூக பிரச்சனைக்கு குரல் கொடுப்பவன் நான் என இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கோவை பிராட்வே திரையரங்கில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் ‘ஹேப்பிராஜ்’ படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். வரும் மார்ச் 27 தேதி படம் வெளியாக உள்ள நிலையில் இதில் படத்தின் சிறப்பம்சங்கள் குறித்து ஜிவி விளக்கமளித்தார். ‘ஹேப்பிராஜ்’ திரைப்படம் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில், குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் படம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான செய்தியையும் கொண்டுள்ளது. குறிப்பாக பெற்றோரின் முக்கியத்துவத்தை படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.
இந்த திரைப்படம் அரசியல் சார்ந்ததல்ல என்றும் கோடை விடுமுறை காலத்தை முன்னிட்டு வெளியிடப்படுவதாகவும் குறிபிட்டார். அனைவரும் திரையரங்கிற்கு வந்து பார்ப்பதற்கான அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன என்றார்.
மேலும், மாநில தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தங்களுக்கு பிடித்த தலைவர்களை தேர்வு செய்து வாக்கு அளிக்க வேண்டும் என்றும், வாக்குச்சதவீதத்தை அதிகரிக்க புதிய வாக்காளர்கள் உறுதியாக வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நான் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் ஆதரிப்பவன் அல்ல. அரசியல்வாதியும் அல்ல. சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதே எனது நோக்கம் என்றார். அனைவரும் எந்த தயக்கமும் இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

