Header Top Ad
Header Top Ad

கந்துவட்டி கொடுமை: என்ன செய்கிறது கோவை மாவட்ட போலீஸ்?

கோவை: கோவையில் கந்துவட்டி கொடுமை மற்றும் மிரட்டுலுக்கு உள்ளாகி விஷம் குடித்த நபர், தனக்கும் தன் குடும்பத்திற்கும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்ஜித்குமார். இவருக்கு திருமணமாகி பள்ளிக்குச் செல்லும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சஞ்சித்குமார் கட்டிட மேசன் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சஞ்சித்குமார் கடந்த ஆண்டு இவரது ஊரைச் சேர்ந்த பிரசாத் பிரபு என்வரிடம் ரூ.3.4 லட்சம் கடனாகப் பெற்றார். அந்த கடனுக்கு மாதம் வட்டியாக ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறிய பிரசாத், அதற்காக முத்திரைத்தாளில் கையொப்பம் பெற்றுள்ளார்.

Advertisement

Single Content Ad

முதலில் சஞ்சித் சரியாக வட்டி கட்டி வந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினாலும், அவரது மனைவிக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகளினாலும் வட்டி கட்ட முடியாமல் போனது.

இதனையடுத்து வட்டிப் பணத்தைக் கேட்டு சஞ்சித்தை பிரசாத் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சஞ்சித் அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரிடம் ரூ.45 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி பிரசாத்க்கு கொடுத்துள்ளார்.

காளிமுத்துவிடம் வாங்கிய கந்துவட்டிக்கும் வாரம் ரூ.4,500 வட்டியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனிடையே 8 வாரங்கள் கடனுக்கான வட்டி செலுத்தி வந்த நிலையில், இருவருக்கும் கடன் கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் சஞ்சித்.

தொடர்ந்து, சஞ்சித்தையும் அவரது குடும்பத்தினரையும் பிரசாத் கடுமையான வார்த்தைகளால் மிரட்டியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அவர் மூன்று தினங்களுக்கு முன்பு சானிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

உடல் நிலை தேறிய நிலையில், தனக்கு கடன் கொடுத்த பிரசாத், காளிமுத்து மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னைக் கொன்று விடுவார்கள் என்றும் அவர்களால் தன்னுடைய குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் கூறி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தார்.

தான் வாங்கிய கடனுக்கு அதிகமாகவே வட்டி கட்டி இருப்பதாகவும், இருப்பினும் அசல் தொகையைச் செலுத்த வேண்டும் என்று அவர்கள் தொல்லை செய்வதாகவும், குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ள சஞ்சய் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழகத்தில் ஏற்கனவே கந்துவட்டிக் கொடுமையால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கந்துவட்டி வசூல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நகரப்பகுதிகளில் கந்துவட்டி கொடுமைகள் சற்றே குறைந்த நிலையில், கோவையின் புறநகர்ப் பகுதிகளில் இத்தகைய கொடுமைகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.

கடன் வாங்கியவர்களுக்கு மிரட்டல் விடுத்து, கடன் வாங்கியவரின் குடும்பத்தினரின் உயிருக்கும், சமூக அந்தஸ்துக்கும் குந்தகம் விளைவிக்கும் கந்துவட்டி கும்பலை சட்டரீதியாக ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாத மாவட்ட போலீசார், இதனை கண்டும்காணாமல் விட்டுவிடுவதாலும், பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக பிரச்னைகளை முடித்துவிடுவதாலும் கந்துவட்டிக் கொடுமை முடிவுக்குவந்தபாடு இல்லை.

உயிரிழப்பு ஏற்பட்டபின் நடவடிக்கை எடுபதற்கு மாறாக, அதிகாரிகள் இந்த மனித உரிமை மீறல் பிரச்னையில் கவனம் செலுத்தி உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Recent News

Single Sidebar Ad

Latest Articles