கோவை: டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபரை கோவையில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் பணி வாங்கி கொடுப்பது என்று தெரிவித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஆன்லைன் மூலமும் ஏராளமான மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
சித்திரவேலின் மோசடி குறித்து டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர்.
அப்போது சித்திரவேல் கோவையில் தங்கி இருப்பது குறித்து டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று கோவை வந்தடைந்த டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சித்திரவேல் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது ஏராளமான போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.பி.ஐ. அதிகாரி தோற்றத்தில் போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட சித்திரவேலை, மத்திய ஆயுதப்படை போலீசாரின் உதவியுடன் தனி இடத்துக்கு அழைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் இன்று கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவெடுத்துள்ளனர். பின்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் அவரை டெல்லி அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.




