கோவை: வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரரை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர் எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பீர்மொய்தீன்.
இவர் நேற்று ஆர் எஸ் புரம் ஆரோகியசாமி ரோடு பகுதியில் போலீசாருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி பீர்மொய்தீன் சோதனை மேற்கொண்டார்.
அதில் அந்த நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பீர்மொய்தீன் தன் உடன் பணியில் இருந்த எஸ்ஐ ஸ்ரீனிவாசனிடம் தெரிவித்தார்.
அவர் அந்த நபர் மீது போதையில் வாகனத்தை இயக்கியதாக வழக்குப்பதிவு செய்து மருத்துவ சோதனைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது அத்திரம் அடைந்த அந்த நபர் திடீரென தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பீர்மொய்தீன் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தடாகம் ரோடு பால் கம்பெனி பகுதி வள்ளியம்மாள் வீதியை சேர்ந்த ராஜன் (38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது அரசு பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.