கோவை: கேரளா மாநிலம் பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி, உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கேரள-கோவை எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
கேரளாவில் இந்த வைரஸ் தொற்று காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ள. இதனிடையே தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க எல்லையில் சுகாதாரத்துறையினர் பரிசோதனை முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம், காரமடையை அடுத்த கோபனார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, தெர்மல் ஸ்கேனர் மூலமாக, வாகனங்களில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்கள் கோவையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இதுகுறித்து காரமடை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சியாமளா கூறுகையில்,

“பொதுமக்கள் பழங்களை நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும். தோட்டத்தில் அணில் அல்லது வேறு பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது.
நிபா வைரஸ் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து பன்றிகளுக்கும். மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கி பழகும் போது, அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி இதன் அறிகுறிகளாக உள்ளது. தொற்று தீவிரமடையும் பட்சத்தில் உயிரிழப்பும் ஏற்பட வாய்புள்ளது” என்றார்.