கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் நடைபெற்ற பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழா புகழரங்கம் நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவர், டவுன் ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பேரூர் ஆதீன நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டார்.
இதில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், பேரூர் ஆதீன மருத்துவமனை அறங்காவலர் குழுவினர் மற்றும் பேரூர் கல்லூரி நிர்வாகக் குழுவினர் முன்னிலை வகித்தனர். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் திருவுருவப்படத்தை குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைத்து சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பேரூர் ஆதீனம் 25ஆம் பட்டம் மருதாச்சல அடிகளார், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆன்மீக வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பேரூர் ஆதீனம் முக்கிய தொண்டு ஆற்றி வருவதாக குறிப்பிட்டார்.
அவரது சிறப்பு உரையில் பேசியதாவது, ஆன்மிகம் தழைத்தோங்கினால் தான் மகத்தான சமுதாயம் உருவாக முடியும். அந்த மகத்தான சேவையை செய்தவர் பேரூர் ஆதினம். சமுதாயம் இன்றைக்கு எப்படி மாறி இருக்கிறது என்றால், அடிகளார் எந்த காரில் வருகிறார் என பார்க்கும் இளைய சமுதாயம் உருவாகியுள்ளது.
இந்த விளம்பர யுகத்தில் எதற்கும் அடிபணியாத ஆதீனமாக பேரூராதீனம் உள்ளது. பேரூர் ஆதீனத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மருத்துவமனை ஏழை எளிய மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை செய்ய உள்ளது. இதற்கு நிதி அளித்து உதவிய அனைத்து அறங்காவலர் குழுவிற்கும் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் அவர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று சாதி வேற்றுமைகளை போக்கும் வகையில் ஆன்மீக கருத்துக்களை எடுத்துரைத்து வருகிறார். இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்துகிறார்.
பேரூர் தமிழ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சிக்காக அதிக ஆய்வுகளை செய்துள்ள கல்லூரி ஆக பேரூர் தமிழ் கல்லூரி உள்ளது.
நமது பாரதப் பிரதமர் அவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். இதற்கு காரணம் முறையான திட்டமிடுதலும் அந்தத் அந்தத் திட்டங்களின் பயன்கள் கடைசி வரை சென்றுள்ளதா என்பதை ஆய்வு செய்வதும் தான். நமது பிரதமர் அவர்கள் ராமேஸ்வரத்தில் விரதமிருந்ததையும் இமாலயத்தில் தியானம் செய்ததையும் நாம் பார்த்தோம்.
நவராத்திரி முன்னிட்டு ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்வில் அவரை சந்தித்து பேசியபோது, பிரதமர் எதுவும் சாப்பிடாமல் இருந்தார். அப்போது நான் கேட்டபோது நவராத்திரிக்காக 9 நாட்கள் எந்த உணவு இன்றி வெறும் தண்ணீரை மட்டுமே பருகி வருவதாக கூறினார். அவரது ஆன்மீக சிந்தனை என்னை வியப்பில் ஆழ்த்தியது.
குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை. அவரவர் வசதிக்கேற்ப மொழியில் வழிபாடு செய்யலாம். பிற மொழி எதிர்ப்பு மூலம் தமிழ் வளரும் என நினைப்பது அறியாமை. சம்ஸ்கிருதத்தை எதிர்த்து பேசுவதால் தமிழ் வளர முடியாது. தமிழ் தீண்டத்தகாத மொழி என கூறுவதால் சமசுகிருதம் வளர முடியாது.
இதையெல்லாம் உணர்ந்து நடுநிலையோடு ஆன்மீகப் பாதையில் பேரூர் ஆதீனம் சென்று வருகிறது. பேரூர் ஆதீனத்தின் ஆன்மீகத் தொண்டும் சமுதாயத் தொண்டும் தமிழ் தொண்டும் பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என வேண்டுகிறேன் என தெரிவித்தார்.




