கோவை: கோவைக்கு ரயிலில்
கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்…
கோவைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது
செய்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ரயிலில் சட்ட விரோதமாக கஞ்சா, போதை பொருட்கள், மது பாட்டில்கள் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். அதன் படி நேற்று மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது 1வது பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் பேக்கில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பத்மா சரன் பிரதான் (29) என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மா சரன் பிரதானை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.