கோவை: ஹோப் காலேஜ் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவினாசி சாலையில் நவ இந்தியாவிலிருந்து ஹோப் காலேஜ் செல்லும் வழியில் சிக்னல் அருகே தனியார் கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஷோரூம் அருகே இன்று தண்ணீர் லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
Advertisement

இந்த விபத்தில் கார் ஷோரூமில் பணியாற்றி வந்த பிரசாந்த் என்பவர் லாரியின் அடியில் சிக்கித் துடித்தார். ஊழியர்கள் அவரை மீட்கும் முன்பு பிரசாந்த் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து கிரேன் உதவியுடன் கவிழ்ந்து கிடந்த தண்ணீர் லாரியை தூக்கிய தீயணைப்புத்துறையினர் பிரசாந்த் உடலை மீட்டனர்.
பின்னர், அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணிபுரிந்து வரும் நிறுவனம் முன்பே இளைஞர் பலியான சம்பவம், சக பணியாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.