கோவை: கோவை வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில் பனை விதைகள் பதிக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு பனை விதைகளை நட்டு வைத்தார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும், குட்டை உள்ள பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று வெள்ளலூர் உரக்கிடங்கு வளாகத்தில், மொத்தம் 55 ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகளில், முதற்கட்டமாக சுமார் 9 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டு பணி துவங்கப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள பனை விதைகள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பனை விதைகள் பதிக்கும் பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டார். முன்னதாக, அவர் கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ. 3.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதல்வர் படைப்பக கட்டுமான பணி, வடவள்ளி வி.என். நகர் பகுதியில் ரூ. 1.48 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி மற்றும் புல்லுக்காடு பகுதியில் ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டுமானப் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



