கோவை: மத்திய அரசு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வி உதவித்தொகை வழங்குவதாக ஆன்லைனில் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கோவை புளியகுளம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் பீட்டர். இவரது மகன் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று சார்லஸ் பீட்டருக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை என்ற Profileல் இருந்து செல்போன் வீடியோ கால் வந்துள்ளது.
அதனை ஆன் செய்து பேசும்பொழுது எதிர்புறம் இருந்து பேசிய நபர் முகத்தை காட்டாமல் மத்திய அரசு திட்டத்தின் கீழ் உங்களது மகனுக்கு பள்ளிக் கல்வி உதவித்தொகை 38,500 வந்திருப்பதாகவும் அதனை அனுப்புவதற்கு Gpay க்யூஆர் காண்பிக்குமாறும் OTP வரும் அதனை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.
சார்லஸ் பீட்டருக்கு அதனை எவ்வாறு எடுப்பது என்று சரியாக தெரியாததால் அருகில் இருந்த அவரது மாமாவிடம் கேட்டறிந்து QR Codeயை காண்பித்துள்ளார். ஆனால் அவரது வங்கியில் பணம் குறைவாக இருந்ததால் இந்த வங்கிக்கு பணம் அனுப்ப முடியாது குறைந்தபட்சம் 10,000 ரூபாய் இருப்பு உள்ள வங்கிக்கு தான் பணம் அனுப்ப முடியும் என்று வீடியோ காலில் பேசிய நபர் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து மாமாவின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள் என்று கூறி மாமாவின் Gpay க்யூஆர் கோடை காண்பித்துள்ளனர். பிறகு அவருக்கு, இரண்டு மூன்று முறை OTP வந்துள்ளது, அதனையும் அந்த வீடியோ காலில் இருந்த நபரிடம் கூறியிருக்கிறார்கள்.
அப்போது பணம் இவர்களுக்கு வருவதற்கு மாறாக இவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் 53 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வீடியோ காலில் இருந்த நபரிடம் பணம் எங்களுக்கு வராமல் எங்களது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். அப்பொழுது அந்த நபர் முறையான விளக்கம் அளிக்காமல் வீடியோ காலை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த சார்லஸ் பீட்டர் மற்றும் அவரது மாமா உடனடியாக அருகில் உள்ள ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ கால் மூலம் மத்திய அரசு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என்று கூறி பணத்தை மோசடி கொள்ளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.