கோவை: கோவை மாவட்ட காவல்துறையினர் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 32 ரவுடிகள் கைது செய்துள்ளனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும் அமைதியான தேர்தல் சூழலை உறுதி செய்வதற்கும் கோவை மாவட்ட காவல்துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தலைமையில் மாவட்டம் முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பழங்குற்றவாளிகள் மற்றும் முந்தைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் மீது சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.
அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கண்டறியப்பட்ட 32 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 7 வழக்குகள் NDPS சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் 22 பேர் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளனர், மேலும் 10 பழக்கப்பட்ட குற்றவாளிகள் மீது மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 110ன் கீழ் பிணை ஏற்கப்பட்டுள்ளனர்.

