கோவை: போலி கணக்கு மூலம் பெண்கள் ஆபாசப் படங்களை இணையதளங்களில் பதிவேற்றிய ஆசாமியை கோவை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை எடுக்கும் சில கயவர்கள் அதனை மார்பிங் செய்து ஆபாசமாகச் சித்தரித்து, பொதுவெளியில் பரப்பி விடுகின்றனர்.
இதனால் மனமுடையும் பெண்கள் சில நேரங்களில் தவறான முடிவுகளை எடுக்கும் வரை சென்றுவிடுகின்றனர். இதன் மீதான புகார்கள் பெறப்படும் போது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூகவலைதளங்களில் சில போலி கணக்குகளில் சில பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் சித்தரிக்கப்பட்ட படங்கள் வெளியிடப்படுவதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் அந்த சமூகவலைதள பக்கங்களை போலீசார் கவனித்து வந்தனர். மேலும், அது யார் பெயரில் தொடங்கப்பட்டது, எங்கிருந்து, எந்த ஐ.பி., முகவரியில் இயக்கப்படுகிறது என்ற விவரங்களை விசாரிக்கத் தொடங்கினர்.
அப்போது, செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் இவ்வாறு பதிவேற்றி வருவது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் அந்த நபர் பெயர் ராஜா (வயது 33) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.