கோவை: ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர் போலீசாரை பார்த்து பைக்கை திருப்பிய நிலையில், காவலர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புலியகுளம் ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் அஸ்வின் (24). கபடி வீரரான இவர், நேற்று இரவு புலியகுளம் பகுதியில் இருந்து சுங்கம் நோக்கி நண்பர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சுங்கம் சிக்னல் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்ததால், போலீசாரை பார்த்த அஸ்வின் தனது இருசக்கர வாகனத்தை திருப்பியதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் இருட்டில் மறைந்திருந்த காவலர் ஒருவர், தன் கையில் இருந்த பிளாஸ்டிக் பைப்பால் அஸ்வினை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் நிலைதடுமாறி அஸ்வின் கீழே விழுந்தார்.
தொடர்ந்து தாக்கியதில், அவரது தாடை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது பெற்றோர், அஸ்வினை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவரது தாடையில் 5 தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாக்கியதாக கூறப்படும் டி.1 போலீஸ் நிலைய காவலர் மீது அஸ்வின் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று தான் சாத்தான் குளம், போலீசாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்த நிலையில் , கோவையில் இந்த சம்பவம் போலீடார் மீது பொதுமக்களுக்கு அதிருப்பியை ஏற்படுத்தியுள்ளது.

