கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் மகேஷ்குமார் வரவேற்பு அளித்தார்.
கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில், பாதுகாப்புத் துறை அமைச்சரின் மனைவி சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது மகளும் மருமகனும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement

இதையடுத்து, இன்று தனது மனைவியை பார்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவை வந்தார்.
தொடர்ந்து, தனது மனைவியை மருத்துவமனையில் பார்த்துவிட்டு மாலை 6:15 மணி அளவில் சாமி தரிசனம் செய்ய மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார்.
அங்கு, அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அறங்காவலர் மகேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், ஆதி மூலஸ்தான முருகப்பெருமானையும், பஞ்சமுக விநாயகரையும் தரிசனம் செய்தார்.
அதன்பின், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து, 6:45 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் வருகையை ஒட்டி, கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.