கோவை: தமிழக அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பை வாபஸ் பெற்று புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பை வாபஸ் பெற்று புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம் மூலம் வலியுறுத்தி உள்ளனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு அண்மையில் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பாக தமிழக அரசு அறிவிப்புகளை அறிவித்துள்ளது அந்த அறிவிப்பில் ஏற்கனவே பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களில் 25 சதவிகிதம் மாணவர்களை தேர்ந்தெடுத்து பணம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனால் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்க முடியாமல் உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என தெரிவித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
அந்த இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் முதன்மை கல்வி அலுவலர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அந்த கோரிக்கைகளை உயரதிகாரிகளிடம் தெரிவிப்போம் என்று கூறியதை அடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
தமிழக அரசு இந்த அறிவிப்பை வாபஸ் பெற்று புதிய அறிவிப்பை ஏழை மாணவர்கள் அனைவரும் பயனடையும்படி அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் காத்திருப்பு போராட்டம் மீண்டும் தொடரும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.