2 நிமிடத்தில் பிரியாணி கேட்டு கோவை ஹோட்டலில் ரகளை!

கோவை: காந்திபுரத்தில் பிரபல ஹோட்டலில் 2 நிமிடத்தில் பிரியாணி கேட்டு மேலாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிரபு (40). இவர் காந்திபுரத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது ஓட்டலுக்கு வாலிபர் ஒருவர் மதுபோதையில் வந்து பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அப்போது ஓட்டல் ஊழியர்கள் அவரை சிறிது நேரம் காத்திருக்கும் படி தெரிவித்துள்ளார்.

அப்போது அந்த வாலிபர் ஓட்டல் ஊழியர்களிடம் தனக்கு 2 நிமிடத்தில் பிரியாணி வேண்டும் என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த மேலாளர் பிரபு அவரிடம் சென்று அவரை சமாதானம் செய்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் மேலாளர் பிரபுவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த வாலிபர் ஈரோடு தாளவாடி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரபு புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Recent News

Video

Join WhatsApp