கோவை: கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு முதுமலையில் இருந்து ஜான் என்ற கும்கி யானை நேற்றிரவு வரவழைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயலில் உள்ள யானைகள் முகாம் ரூ.8 கோடி செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதன்படி, 50 ஏக்கர் பரப்பளவில் 18 புதிய யானைகள் ஷெட், 2 கரோல், 2 கி.மீ. தொலைவிற்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், 3 சிறிய குட்டைகள், 8 யானை பாகன்கள் தங்கும் விடுதிகள், 5 யானைகள் குளிப்பதற்கான ஷவர், தண்ணீர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் முகாமை சுற்றி அகழி, சோலார் மின்வேலி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாமினை கடந்த டிச.30ம் தேதியன்று கோவைக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் விரட்டுதல், பிடித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த முகாமிற்கு கும்கி யானைகளை கொண்டு வரவும், இதனால் டாப்சிலிப், முதுமலை பகுதிகளில் இருந்து கும்கி யானைகளை வரவழைக்கப்படுவதால் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்கவும் வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதற்காக முதன்மை தலைமை வனப்பாதுகாவலரிடம் கோவை வனத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டிருந்தனர்.
இதற்கான அனுமதி கிடைத்ததை தொடர்ந்து முதற்கட்டமாக அரிசி ராஜா, காவேரி என்ற 2 கும்கி யானைகள் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சாடிவயல் யானைகள் முகாமிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டன.
இந்த நிலையில் முதுமலை யானைகள் முகாமில் இருந்து ஜான் என்ற கும்கி யானை லாரி மூலம் நேற்றிரவு அழைத்து வரப்பட்டது. இதனால் சாடிவயல் யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் கும்கி யானைகளின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இதேபோல சுமங்கலா என்ற பெண் யானையையும் அழைத்து வர வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த முகாமில் கும்கி யானைகள் பராமரிக்கப்படுவதோடு, காட்டு யானைகளை கட்டுப்படுத்துதல், திரட்டுதல், பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.



