கோவை: கோவையில் போதை ஸ்டாம்புகள், கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட மூன்று பேருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
போதை மருந்து தடவிய ஸ்டாம்புகளை கடத்தி விற்பனை செய்ய முயன்ற மூன்று பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கோவை, மேட்டுப்பாளையம் சாலை வெள்ளக்கிணறு அருகே 2020ம் ஆண்டு போதைப் பொருள் விற்பனை நடப்பதாக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சாவை விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கோவையைச் சேர்ந்த முகமத் தபரீஸ், பிரதீப் ராஜ், விவியின் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் மூன்று பேரிடம் இருந்து போதை மருந்து தடவப்பட்ட 20க்கும் மேற்பட்ட ஸ்டாம்புகள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான மூன்று பேரும் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மருந்துகள் தடவிய ஸ்டாம்புகளை பலருக்கு கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் தலா ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.