கோவை: சுங்கம் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை – திருச்சி சாலை சுங்கம் அருகே இன்று காலை பள்ளிக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது பெண் ஆட்டோ டிரைவர், ரேஸ்கோர்ஸ் சாலையில் ஆட்டோவை திருப்ப முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
இதில் பேருந்து மற்றும் ஆட்டோ சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பள்ளிக் குழந்தைகள் உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மேலும், அந்த பகுதியில் விபத்து ஏற்படாதவாறு தடுப்புகளை அமைக்க அறிவுறுத்தினார். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் பள்ளிக் குழந்தைகள் வேறு வாகனம் மூலம் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

