கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையம் சார்பாக 12வது விதை கருத்தரங்கு நடைபெற்றது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விதை மையம் சார்பாக. 12வது விதை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், 85-க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு 2026-27 ஆம் ஆண்டிற்கான விதை உற்பத்தி திட்டத்தை வரையரை செய்தனர்.
இந்த கருத்தரங்கில், விதை மைய இயக்குநர் முனைவர் உமாராணி வரவேற்புரை வழங்கி, 2025-26 ஆம் ஆண்டில் விதை உற்பத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சாதனைகளை கூறினார். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் மற்றும் பொறுப்புத் துணைவேந்தருமான முனைவர் சுப்ரமணியன் விதை மையத்தில் அமைந்துள்ள விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பொன்விழா கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
கல்வி, ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் விதை உற்பத்தி ஆகியவற்றில் விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கடந்த 50 ஆண்டுகளாகப் படைத்து வரும் பயணத்தின் முக்கிய மைல்கல்லை இக்கண்காட்சி காட்சிப்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் பொறுப்புத் துணை வேந்தர் அவர்கள் 12வது விதை கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசும் போது தரமான விதைகள் பயிர் விளைச்சலை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கின்றன என்பதை வலியுறுத்தினார்.
எனவே, நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தரமான விதைகளே அடிப்படை என்பதை சுட்டிக்காட்டினாார். தமிழக விவசாயிகளிடையே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் இரகங்களுக்குப் பெரும் வரவேற்பும் தேவையும் உள்ளதையும்
எடுத்துரைத்தார்.
தற்போது 40 வகையான பயிர்கள் மற்றும் 175 இரகங்களில் 1800 டன் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. உயர்தர விதைகளுக்கான விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 2026-27 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை உற்பத்தியை இருமடங்காக்கி, 3500 டன் விதைகள் உற்பத்தி செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

