கோவை: கோவையில் மது போதையில் வந்ததைத் தட்டி கேட்ட மனைவியின் மண்டையை உடைத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையத்தை சேர்ந்தவர் ஹேமலதா (38). இவரது கணவர் குருமூர்த்தி (35). இவர் சவுரிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. அதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி ஒண்டிப்புதூரில் உள்ள ஹேமலதாவின் உறவினர் இறந்து விட்டார்.
அதற்காக அவர் ஒண்டிப்புதூர் சென்று அங்கு 6 நாட்கள் தங்கி இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். வீட்டில் குருமூர்த்தி இல்லாததால் ஹேமலதா அவருக்கு போனில் அழைத்துள்ளார்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து ஹேமலதா இரவு வீட்டின் முன் அமர்ந்து குருமூர்த்திக்காக காத்திருந்தார். அப்போது குருமூர்த்தி மது போதையில் வந்தார்.
அவரை, ஹேமலதா மதுபோதையில் வந்ததை கண்டித்து, போனை எடுக்காதது குறித்து கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி தகாத வார்த்ததைகளால் திட்டி ஹேமலதாவை சரமாரியாக தாக்கினார்.
அவருக்கு தலை மற்றும் காதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து ஹேமலதா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

