கோவை: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025 இறுதி சுற்று போட்டிகள் கோவையில் துவங்கியது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025’ இறுதிச்சுற்று போட்டிகள் நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 – மென்பொருள் வடிவமைப்பு போட்டிகளின் இறுதி சுற்று போட்டிகள் துவங்கி உள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இறுதி சுற்று போட்டியில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 136 மாணவர்கள், 20 குழுக்களாக இக்கல்லூரியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்கு மத்திய ஜல் சக்தி துறையின் கீழ் பல்வேறு தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவர் குழுவினர் சிறந்த தீர்வளிக்கும் மென்பொருளை வடிவமைக்கின்றனர். இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் சிறந்த அங்கீகாரங்கள் வழங்கப்படுகிறது.
மேலும், இப்போட்டியில் கண்டுபிடிக்கப்படும் சிறந்த மென்பொருள் வடிவமைப்புகள் பல்வேறு மத்திய அரசு துறைகளிலும் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


