கோவை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் பிறபித்த உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையிலும் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. கோவை செட்டி வீதி பகுதியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் அக்கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை புரிந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு திமுக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.
அதேபோல் காந்திபார்க் பகுதியில் இந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டனர். அப்பொழுது போராட்டத்திற்கு வந்தவர்களை போராட்டம் துவங்குவதற்கு முன்பே காவல்துறையினர் கைது செய்ததால் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.


