கோவை: கோவை மாவட்டம், சூலூர் அருகே குடிபோதையில் நண்பனை கொலை செய்த மூவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேயம்பாளையத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (மதுரை), சூலூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை இவர் தனது நண்பர்களான ரகுபதி (24), முத்துக்கிருஷ்ணன் (24), மற்றும் கரண் (23) ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்ததார். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகரிக்கவே தகராறு ஏற்பட்டது.

அப்போது, மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த சுரேஷின் நண்பர்களான ரகுபதி (24), முத்துக்கிருஷ்ணன் (24), மற்றும் கரண் (23) ஆகியோர் மது பாட்டிலால் சுரேஷை தாக்கினர்.
இதில், சுரேஷின் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. அதிர்ச்சியடைந்த மூவரும் செய்வதறியாது நின்ற நிலையில், அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
உடலை எரித்தனர்
தொடர்ந்து மது போதையிலேயே மூவரும், சுரேஷின் உடலை எரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்தனர். இன்று விடிந்ததும், மதுபோதையில் கொலை செய்ததை உணர்ந்த மூவரும் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்து, சம்பவத்தை போலீசாரிடம் கூறினர்.

அதிர்ச்சியடைந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று சுரேஷின் உடலைக் கைப்பற்றினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மூவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடிபோதையில் நண்பனை சக நண்பர்களே கொலை செய்து புதைத்த சம்பவம், சூலூர் பகுதியை உலுக்கியுள்ளது.