கோவை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆலோசனை நடத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய உத்தரவுகள் வழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசு ஊழியர்கள், அதிகாரிகள், போலீசார் தேர்தல் ஏற்பாட்டு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று சென்னையில் இருந்து கோவை வந்தார். பின்னர் அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கூட்ட அரங்கில், மேற்கு மண்டலத்தை சேர்ந்த கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 8 மாவட்ட போலீஸ் அதிகாரியுடன் கலந்து ஆலோசனை செய்தார்.
இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் அமைதியாகவும், எந்த விதமான அச்சுறுத்தல் இன்றி நடக்க தேர்தல் ஏற்பாட்டு பணிகளை காவல்துறை மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட மேற்கு மண்டல போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

