கோவை: சுட்டுப் பிடிக்கப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா என்பதை போலீசார் நிரூபிக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் தாசில்தார் அலுவலகம் அருகில் இன்று காலை கோவை மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி நிர்வாகிகள் லீலா உண்ணி, விமலா கண்ணம்மாள் முன்னிலை வைத்தனர்.
மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ, மற்றும் எம்எல்ஏக்கள் கே ஆர் ஜெயராமன், சூலூர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ மகேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அதிமுக மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி பேசியதாவது:-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்தவர்கள் உள்புதரில் தூக்கி வீசி உள்ளனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார்.
ஆனால் அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லையா? அவர் கதறியும் வக்கிர புத்தியுள்ள அந்த கும்பல் அவரை விடாமல் சீரழித்துள்ளது
போலீசார் இந்த சம்பவத்தில் துடியலூரில் வைத்து 3 குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக கூறியுள்ளார்கள். ஆனால் அவர்களை யாருக்கும் காட்ட வில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா அல்லது போலி குற்றவாளிகளா என்ற சந்தேகம் உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மூலம் போலீஸ் நிலையத்தில் வைத்து அந்த குற்றவாளிகளை அடையாளம் காண செய்ய வேண்டும். இந்த சம்பவத்தை அதிமுக தலைவர்கள் கண்டித்து உள்ள நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் காவலரை சென்று சந்தித்து மனு கொடுத்த கனிமொழியும் ஒன்றும் கூறவில்லை.
அதே போன்று கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியில் இருந்த போலீசார் தற்போது இல்லை. இப்போது ஸ்டாலின் போலீஸ் தான் உள்ளது. இதுவரை இந்த ஆட்சியில் 4150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்
கோவை மாநகரம் தொழில்நகரம். இங்கு ஏராளமான பேர் வந்து செல்லும் விமான நிலையத்தின் அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கவுன்சிலர் பிரபாகரன், சிங்கைபாலன், ராமச்சந்திரன், மற்றும் ஏராளமான மகளிர் அணியினர் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


