கோவை: கோவையில் 50 இணைகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது…
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோவையில் 50 ஜோடிகளுக்கு சீர் வரிசைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரை பவுன் தாலி உட்பட பல்வேறு சீர்வரிசைகள் அறநிலையத்துறையால் வழங்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

அதன்படி கோவையில் உக்கடம் பகுதியில் உள்ள இலட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் சிரவை ஆதீனம், மாநகராட்சி துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மணமக்களின் உறவினர்கள் கோவிலுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும்
மணமக்களை வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகளுக்கு கட்டில் பீரோ மெத்தை உட்பட பல்வேறு சீர்வரிசைகள் வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சீர்வரிசைகளுடன் திருமணம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.
மேலும் புதுமண தம்பதிகளின் உறவினர்களும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையே அனைத்து செலவுகளையும் ஏற்று திருமணம் செய்து வைத்தது எங்கள் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
கோவிலில் ஒரே மேடையில் 50 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது கோவிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. மேலும் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வந்த முதியவர்களும் புதுமண தம்பதிகளை வாழ்த்தி சென்றனர்.