கோவையில் துணை குடியரசுத் தலைவர் நிகழ்ச்சியின் போது நுழைந்த இருவர்- பாஜக ஆர்ப்பாட்டம்

கோவை: கோவையில் குடியரசு துணைத் தலைவர் வருகையின் போது பாதுகாப்பை மீறி இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் உள்ளே நுழைந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினர் 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்துபோது காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. அவர் வருகைக்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி, அத்துமீறி குடியரசு துணை தலைவர் செல்லும் பாதையில் நுழைந்தனர்.

ஒரு வழிப்பாதையில் இரு சக்கர வாகனம் சென்ற போது விபத்தும் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோவை காவல் துறையினரின் பாதுகாப்பு குளறுபடியே விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டி சிவானந்தா காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறும்போது,

பிடிபட்ட இரண்டு இளைஞர்கள் மீதும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனவும் , சாதாரண பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை எனில் , மாநில தலைவர் தலைமையில் கோவையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தார். இளைஞர்கள் இருவர் மீதும் கலவரத்தை தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கை காவல் துறையினர் விசாரிப்பது சரியாக இருக்காது எனவும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் அப்பொழுது தான் உண்மை தெரிய வரும் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம் காரணமாக சிவானந்தா காலனி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Recent News

Video

Join WhatsApp