கோவை: வடவள்ளி ஆரம்ப துணை சுகாதார நிலைய செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கோவை மாநகர் வடவள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுக பிரமுகர் ஒருவர் வீடாக மாற்றி பயன்படுத்தி வருவதாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது.
இது சம்பந்தமாக பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பணிபுரிந்து வந்த நகர்புற சுகாதார செவிலியர் கனிதா, அங்கேயே குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் நான்கு அறைகளைக் கொண்ட அந்த சுகாதார நிலையத்தில் இரண்டு அறைகளில் குடியிருப்பிற்கும், இரண்டு அறைகளை ஆரம்ப சுகாதார நிலையமாக பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்துள்ளது.

இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக பயன்படுத்துவதாக எழுந்த புகாருக்கு, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில், அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி திறக்கப்பட்டதாகவும், ஏற்கனவே வடவள்ளியில் இருந்த 4 அறைகள் கொண்ட பழைய ஆரம்ப சுகாதார அலுவலகம், துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கனிதா பணியமர்த்தபட்டு கர்பிணிகளுக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி, சிறு உபாதைகளுக்கான சிகிச்சை போன்றவை வந்தராகவும்,
சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கனிதா மற்றும் அவரது கணவர் ஷியாம் சுந்தர் வீட்டு உபயோக பொருட்களை வைத்திருந்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதனை கவனிக்க தவறிய மாநகர சுகாதார அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் விளக்க விசாரணையின் அடிப்படையில் கனிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருந்து பணிபுரிய இரண்டு அறைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு அறையும் சேர்த்து குடியிருக்க பயன்படுத்தியதன் காரணமாக கனிதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி பாலுசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

